
மோதல் பகுதிகளில் வாழும் கிறிஸ்தவர்களுக்காக செபிப்போம்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
போர் அல்லது மோதல்கள் நிறைந்த பகுதிகளில், குறிப்பாக மத்திய கிழக்கில் வாழும் கிறிஸ்தவர்கள், அமைதி, நல்லிணக்கம் மற்றும் நம்பிக்கையின் விதைகளாக இருக்க வேண்டும் என இறைவேண்டல் செய்வோம் என்று கூறியுள்ளார் திருத்தந்தை பதினான்காம் லியோ.
நவம்பர் 26, புதன்கிழமையன்று வெளியிட்டுள்ள டிசம்பர் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தில் இவ்வாறு கூறியுள்ள திருத்தந்தை, முழு கருத்தையும் செப வடிவில் வழங்கியுள்ளார்.
போரினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கிறிஸ்தவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளை ஒப்புக்கொண்டுள்ள திருத்தந்தை வன்முறையின் மத்தியிலும், அவர்கள் கடவுளின் ஆறுதலான இருப்பையும் சக விசுவாசிகளின் ஆதரவையும் உணர வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
மன்னித்தல், உடைந்த உறவை மீண்டும் கட்டியெழுப்புதல், இரக்கத்துடன் நீதியை கடைபிடித்தல் ஆகியவற்றில் தனிநபர்களுக்கு உதவுவதில் நம்பிக்கை மற்றும் உடன்பிறந்த உறவின் கூட்டுப் பொறுப்புணர்வின் பங்கை வலியுறுத்தியுள்ளார்.
"'அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்' என்று அழைத்த ஆண்டவர் இயேசுவே, நல்லிணக்கம் சாத்தியமற்றதாகத் தோன்றினாலும் எங்களை உமது அமைதிக்கான கருவிகளாக மாற்றுங்கள்" என்று இறைவேண்டல் செய்துள்ள திருத்தந்தை, மிகவும் சவாலான சூழ்நிலைகளில் ஒப்புரவை வளர்ப்பதற்கான கிறிஸ்தவ அழைப்பை எடுத்துக்காட்டியுள்ளார்.
இந்த நோக்கத்தின் மூலம், உலகளாவிய கத்தோலிக்க சமூகம் மோதல்களால் பாதிக்கப்பட்டவர்களுடன் கூட்டுப் பொறுப்புணர்வுடன் உடன் இருக்கவும், கிறிஸ்துவின் முன்மாதிரியைப் பின்பற்றி ஒன்றிப்பு மற்றும் நம்பிக்கையை மிகை ஆர்வமுடன் உருவாக்குபவர்களாக மாறவும் கேட்டுக்கொண்டு டிசம்பர் மாதத்திற்கான தனது இறைவேண்டல் கருத்தை நிறைவு செய்துள்ளார் திருத்தந்தை.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்







