முற்காலத்தில் நமது முன்னோர்கள் நீரூற்றுகளிலிருந்து நீர் வீணாவதைத் தடுக்க குட்டைகளை உருவாக்கினர். அதிலிருந்து நீரை குடிநீராகவும், விவசாயத்திற்கும் பயன்படுத்தினர். நாளடைவில் குட்டை விரிவடைந்து குளமாக மாறியது. இவை பொதுவாக அரசர்கள் காலத்தில் கட்டப்பட்டவைகளாகவே உள்ளன. இயந்திரத் தொழில் முறைகள் அறிமுகமாகாத காலங்களில், மக்கள் பெரும்பான்மையோரின் தொழில்கள், விவசாயமாகவே இருந்தன. அதனால் கட்டப்படும் குளங்களை அண்டியே மக்கள் குடியிருப்புகள் அமையப் பெற்றன. குளத்தின் நீர்வாய்க்கால் வழியாக விவசாயம் செய்வதற்கு ஏதுவாக அவை அமைக்கப்பட்டன. அதனால் குளத்தைச் சூழ பல விவசாயக் கிராமங்கள் தோற்றம் பெற்றதுடன், குளத்தை அண்மித்த ஊரின் பெயர் குளத்தின் பெயராகவே வைக்கப்பட்டன.
குளங்கள் முதன் முதலில் குடிநீருக்காகவும், விவசாயத்திற்காகவும் பயன்படுத்தப் பட்டன. ஆனால் தற்போது குளத்து நீர் குடிநீராக பயன்படுத்தப்படுவதில்லை. விவசாயத்திற்குக் குறைந்த அளவிலும், குளிப்பதற்கும் ஏனைய தேவைகளுக்கும் பெருமளவிலும் பயன்படுத்தப்படுகிறது. குளத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவோரும் உள்ளனர். இவ்வாறு குளத்தில் பிடிக்கப்படும் மீன்கள் நன்னீர் மீன்கள் என அழைக்கப்படும். அவை கடல் மீன்கள் போன்று உப்பு உருசி இருக்காது.
பள்ளம் நோக்கி ஓடும் மழை நீரை, தேக்கி வைக்க, குறுக்கே கட்டப்படும் அணை அநேகமாக ஒரு பக்கத்தில் மட்டுமே இருக்கும். அதனை குளக்கட்டு என்பர். குளக்கட்டுகள் அநேகமாக நேராகவே காணப்படும். சில குளங்கள் விதிவிலக்காகச் சற்று வளைவுடன் உள்ளவைகளும் உள்ளன. இரண்டு அணைக்கட்டுக்களை கொண்ட குளங்களும் உள்ளன. மழைக்காலத்தில் பெய்யும் மழை அதிகரித்தால், குளத்திலிருந்து நீர் வெளியேறுவதற்கு மதகுகளுடன் கூடிய மற்றொரு வாய்க்காலும் அமைந்திருக்கும். கட்டப்பட்டிருக்கும் குளக்கட்டு மழை நீர் நிரம்பி வழிந்தாலோ அல்லது குளக்கட்டு உடைப்பெடுத்தாலோ, குளத்தின் வான்கதவுகள் திறந்துவிடப்படும்.
இலங்கை வரலாற்றிலும் இலங்கையை ஆண்ட அரசர்கள் பலகுளங்களைக் கட்டுவித்தனர். அவ்வாறு கட்டுவித்த குளங்கள் அந்த அரசர்களின் பெயர்களிலேயே அறியப்படுகின்றன. இக்குளங்கள் இலங்கையின் சமதரைப் பிரதேசங்களிலேயே உள்ளன. இலங்கையில் அதிகமான குளங்கள் வடகிழக்குப் பகுதிகளிலேயே உள்ளன.